Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

பித்தப்பையின் வேலை என்ன? அதில் எப்படி கல் உருவாகிறது?

பித்தப்பை என்பது சிறிய பை மாதிரியான ஒரு உறுப்பு என்பதும், அது ஈரலுக்கு கீழே அமைந்துள்ளது என்பதும் நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். அந்த உறுப்பின் பயன் தான் என்ன? அதில் ஏன் கல் உருவாகிறது? வாருங்கள் அலசுவோம்.

பித்தப்பையின் வேலை

நம் ஈரல் மிக முக்கியமாக பைல் என்று கூறப்படும் பித்தநீரை சுரக்கும். இந்த பித்தநீர் தான் நாம் உண்ணும் கொழுப்புணவை செரிக்க உதவுகிறது. இந்த பித்தநீரை ஈரலானது சதா சர்வகாலமும் சுரந்துக்கொண்டே இருக்கும். இப்படி சுரக்கும் பித்தநீர் பித்தப்பையை தான் முதலில் சென்று அடையும். அப்படி சென்று சேரும் பித்தநீரில் உள்ள அதிகப்படியான நீரினை அகற்றி, பித்தநீரை கெட்டியான, அடர்த்தியான வடிவில் பித்தப்பை சேமிக்கத் தொடங்கும்.

நாம் அதிகப்படியான உணவோ, அல்லது அதிகப்படியான கொழுப்புள்ள உணவை உட்கொண்டாலோ, மூளை நம் பித்தப்பைக்கு தான் முதலில் சமிஞையை அனுப்பிகிறது.மூளையின் கட்டளைக்கு உட்பட்டு பித்தப்பை சுருங்கி விரிந்து இந்த கெட்டியான பித்தநீரை சிறுகுடலுக்கு அனுப்புகிறது. அவ்வாறு அனுப்பப்படும் பித்தநீர் கொழுப்பை செரிக்க உதவுகிறது.

பித்தபையில் எப்படி கல் உருவாகிறது?

பல காரணங்களால் பித்தப்பையில் கல் ஏற்படுகிறது. மரபணு, உடல் பருமன், பித்தப்பையில் ஏற்கனவே உள்ள பிரச்னைகள், உணவு பழக்கம் போன்ற காரணங்களால் கல் உருவாகலாம். மிக முக்கிய காரணாமாக பித்தநீரே கல் உருவாவதற்கு காரணமாக அமையலாம்.

பித்தநீர் என்பது மேலும் கெட்டியாகி கொலஸ்ட்ரோல் கொழுப்புடன் சேர்ந்து உருவாகலாம். இது ஒரு வகை பித்தப்பை கல். ரத்தத்தில் இயல்பாக நிறமிகள் (pigments) இருக்கும். சில சமயம் இந்த நிறமிகள் பித்தநீரோடு சேரும்போது ஒரு வகை கல் ஏற்படும். இது இரண்டாம் வகை பித்தப்பைக் கல். பொதுவாக இந்த இரண்டு வகை பித்தப்பை கற்களும் சேர்ந்தே காணப்படும். இதுவே கல் ஏற்படும் முறை. கொலஸ்ட்ரால் கொழுப்பினால் உருவாகும் பித்தநீர் கல் தான் 80% என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

சரி இந்த பித்தநீர் கற்களால் ஆபத்து உண்டாகுமா?

சாதாரணமாக பித்தப்பையில் கற்கள் இருந்தால் நெஞ்செரிச்சல் மாதிரியோ, அல்சர் போன்ற உபாதையையோ ஏற்படும்.

ஆனால் அவை பித்தநீர் வெளியேறும் பாதையை அடைக்கும்போது தான் சிக்கலை கொடுக்கத் தொடங்குகின்றன. அப்படி அவை பாதையை அடைக்கும்போது மேல் வயிற்றுப்பகுதியின் வலப்பக்கத்தில் சுண்டி இழுப்பது போன்ற ஒரு வலியை உணர முடியும். அந்த வலி சிறிது தளர்ந்து பிறகு மறுபடியும் சுண்டியிழுப்பது போன்று வரும். பலமான உணவு அருந்தினாலோ, கொழுப்பு அதிகமான பிரியாணி போன்ற உணவுகளை உட்கொண்டாலோ உடனே வரும். இந்த வலி அதிகமாக இரவு நேரத்தில் ஏற்படும்.

இதையும் கவனிக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்?

இந்த நிலையையும் தாண்டி நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால், பித்தநீரில் நோய் தோற்று ஏற்பட்டு மிகுந்த சிக்கல்களை உருவாக்கி பித்தப்பை அழுகிவிடும் அளவிற்கும் போகலாம். மேலும் இந்த பித்தப்பை கல் கீழே இறங்கி பாதையை அடைக்கத்தொடங்கினால், மஞ்சள் காமாலை ஏற்பட்டு, உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

இதனால் எதையும் தள்ளிப்போடாமல், உடனே நல்ல “காஸ்ட்ரோ நிபுணர்கள்” என்று சொல்லப்படும் வயிறு, உணவுப்பாதை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட மருத்துவ / அறுவை சிகிச்சை நிபுணர்களை (gastro surgeons) அணுகி தீர்வு காண்பது நன்மையை பயக்கும்.

Exit mobile version