பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு: பித்தப்பை இல்லாமல் நம் உணவுமுறை
கோலிசிஸ்டெக்டமி, பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது, இது பித்தப்பை கற்கள் மற்றும் சில பித்தப்பை நோய்களுக்கு பொதுவான ஒரு சிகிச்சை முறையாகும். இந்த செயல்முறை வலிமிகுந்த அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இதற்குப்பிறகு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது உணவு விஷயத்தில் உண்மையாகும். பித்தப்பை, பித்தநீரை சேமித்து வெளியிடுவதில் பங்கு வகிக்கிறது. பித்தநீர் என்பது ஒரு செரிமான திரவமாகும். இது கொழுப்புகளை கரைத்து ஜீரணிக்க உதவுகிறது. பித்தப்பை இல்லை என்றால், பித்தநீர் கல்லீரலிலிருந்து நேரடியாக சிறுகுடலுக்கு ஒரு தொடர்ச்சியான, கட்டுப்பாடற்ற ஓட்டத்தில் செல்கிறது. இது வெளிப்படையாக செரிமானத்தை பாதிக்கலாம்.
பித்தப்பை அகற்றப்பட்ட பிறகு செரிமானம் எப்படி மாறுகிறது
கோலிசிஸ்டெக்டமிக்குப் பிறகு, உடல் தொடர்ந்து பித்தநீரை உற்பத்தி செய்கிறது. ஆனால், முன்பு கூறியபடி, பித்தப்பை அகற்றப்பட்டதால், இந்த பித்தநீரை சேமிக்க எந்த உறுப்பும் இல்லை. கொழுப்பு நிறைந்த உணவுகள் எடுத்த பிறகு இது பின்வருவனவற்றுக்கு வழிவகுக்கலாம்:
- அதிக கொழுப்பு உணவுகளை செரிப்பதில் சிரமம்
- உப்புசமும், வாயு தொல்லையும் ஏற்படலாம்
- பேதி அல்லது வயிற்றுப்போக்கு. குறிப்பாக பெரிய அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளுக்குப் பிறகு
ஆனால் காலப்போக்கில், பெரும்பாலான நோயாளிகள் தங்கள் வழக்கமான உணவு முறையை மீண்டும் தொடங்க முடிகிறது. ஆனாலும் பித்தப்பை அகற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில மாதங்களில், சில உணவு மாற்றங்கள் செரிமான செயல்முறைக்கு உதவலாம். இது நோயாளிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்கவும் உதவும்.
கோலிசிஸ்டெக்டோமிக்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை மாற்றங்கள்
குறைந்த கொழுப்புள்ள உணவுடன் தொடங்குங்கள்
- அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில வாரங்களுக்கு உங்கள் உணவை குறைந்த கொழுப்பு உணவுகளாக மட்டுப்படுத்துவது அறிவுறுத்தப்படுகிறது. இது செரிமான அமைப்பு தொடர்ச்சியான பித்தநீர் ஓட்டத்திற்கு ஏற்ப மாற உதவுகிறது.
- கோழி, வான்கோழி மற்றும் மீன் போன்ற குறைந்த கொழுப்பு புரதங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- பொரித்த, கொழுப்பு நிறைந்த அல்லது கிரீம் கலந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
- ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை சிறிய அளவில் பயன்படுத்தவும்.
சிறிய அளவில், அடிக்கடி உணவுகளை உண்ணுங்கள்.
சிறிய உணவு அளவுகள் செரிமான அமைப்புக்கு மென்மையாக இருக்கின்றன, மேலும் அவை நாள் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படுவதால், உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பித்தநீர் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்கவும் உதவலாம்.
உணவில் படிப்படியாக நார்ச்சத்தை அறிமுகப்படுத்துங்கள்.
நார்ச்சத்து செரிமான அமைப்புக்கு நல்லது. ஆனால் அதிகப்படியான நார்ச்சத்து வயிற்று பிடிப்பு மற்றும் வாயு உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். உங்கள் உணவில் கரையாத நார்ச்சத்து (முழு தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவை) சேர்ப்பதற்கு முன், கரையக்கூடிய நார்ச்சத்தை முதலில் (ஓட்ஸ், வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் போன்றவை) சேர்க்கவும்.
பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்
பித்தப்பை அகற்றப்பட்ட பிறகு, பல உணவுகள் இன்னும் செரிமான அமைப்புக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே அவற்றைத் தவிர்க்கவோ அல்லது எச்சரிக்கையுடன் பயன்படுத்தவோ வேண்டும்:
- கொழுப்பு நிறைந்த இறைச்சி துண்டுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
- முழு கொழுப்பு பால் பொருட்கள் (கிரீம், பாலாடைக்கட்டி, வெண்ணெய்)
- காஃபின் அல்லது கார்பனேற்றப்பட்ட பானங்கள்
- காரமான மற்றும் அமிலத்தன்மையுள்ள உணவுகள்
வெவ்வேறு உணவுகளைத் தாங்கும் திறன் நபருக்கு நபர் மாறுபடும். எனவே, தனிப்பட்ட தூண்டுதல்களைக் கண்டறிய உணவு நாட்குறிப்பு ஒன்றை வைத்திருப்பது உதவியாக இருக்கும். எந்த உணவு மூன்று முறைக்கு மேல் தூண்டுதலை ஏற்படுத்துகிறதோ, அதை முற்றிலும் இனி தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீண்டகால உணவுமுறை கண்ணோட்டம்
நோயாளிகளின் செரிமான அமைப்பு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும்போது, அவர்கள் படிப்படியாக பரந்த அளவிலான உணவுகளை மீண்டும் உண்ணத் தொடங்கலாம். சமச்சீரான, குறைந்த முதல் மிதமான கொழுப்பு உணவைப் பின்பற்றுவதன் மூலம் நீண்டகால செரிமான வசதியையும், பொது ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும். மிக முக்கியமாக, இத்தகைய உணவு பித்த நாளங்களில் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பித்தப்பை அகற்றப்பட்ட பிறகும் பித்த நாளங்களில் பித்தக் கற்கள் உருவாகலாம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பித்தப்பை இல்லாமல் வாழ்வதற்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு தேவை. இது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய ஆரம்ப குணப்படுத்துதல் நிலைகளில் உள்ள ஒரு உண்மையாகும். சிறிய உணவு அளவுகளை உண்பது, அதிக கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பது, உணவு தேர்வுகளில் கவனமாக இருப்பது, நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் சிரமங்களையும் தடுக்க உதவும். பெரும்பாலான மக்கள் சுவையான, இயல்பான உணவு முறைக்குத் திரும்புவார்கள். இது படிப்படியான அணுகுமுறை நல்வாழ்வை ஊக்குவிக்கிறது என்று தான் கூற வேண்டும்.