18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

வயிற்றுப்புண் பற்றி தெரிந்துக்கொள்வோம்

நாம் எல்லோரிடமும் இப்போதெல்லாம் மொபைல் போன்கள் உள்ளன. நாம் அதனை நாள் பட பயன்படுத்தும்போது அதில் கீறல் விழுகிறது. ஸ்க்ராச்கார்ட் வந்த பிறகு அதன் மேல் அதிகம் கீறல் விழுவதில்லை. எப்பேற்பட்ட உறுதியான ஸ்க்ராச்கார்ட்டாக இருந்தாலும், அது பாதுகாப்பிற்கு இருக்கிறது என்பதற்காக நாம் போனை தரையில் போட்டு தேய்த்தால், கீறல் விழத்தான் செய்யும். மேலும் மேலும் கீறல் விழும் பட்சத்தில் நாளடைவில் போனும் பழுதாக்கிவிடும். போனிற்கு ஏற்படும் இந்த நிலைமையை நம் வயிற்றின் உட்பகுதியோடு ஒப்பிட்டு பாருங்கள்.

மொபைல் போன் நம் முழு உடல். போனின் திரை தான் நம் வயிற்றின் உட்பகுதி. ஸ்க்ராச்கார்ட் தான் நம் வயிற்றின் உட்பகுதியில் காணப்படும் மெல்லிய வழவழப்பான ஒரு திரவப்படலம். இந்த திரவப்படலம் நம் வயிற்றை பாதுகாக்கிறது.

வயிற்றில் சுரக்கப்படும் செரிமான நீர்

நம் வயிறு 1.5 லிட்டர் செரிமான நீரை (digestive juice) சுரக்கிறது. அது அமிலத்தன்மை வாய்ந்தது. அந்த செரிமான நீரில் பெப்சின் போன்ற செரிமானத்திற்கு பயன்படும் உயிரிவேதிப்போருட்கள் (biochemical) உள்ளன. மேலும் ஈரலால் சுரக்கப்படும் பித்தநீர் சற்றேறக்குறைய 1 லிட்டர் அளவுக்கு வயிற்றில் வந்து சேர்கிறது. அதேபோல கணையத்தில் சுரக்கப்படும் கணைய நீரும்  1 அல்லது 1.5 லட்டர் அளவுக்கு வயிற்றில் வந்து சேர்கிறது. இவை இல்லாமல் நம் வாயில் சுரக்கப்படும் உமிழ்நீரும் நம்மை அறியாமல் விழுங்கப்பட்டு அதே அளவுக்கு வந்து சேர்கிறது. இந்த எல்லா செரிமான நீர்களும் ஒன்று சேர்ந்து, நம் வயிற்றுக்குள் வந்து சேரும் எந்த உணவுபொருட்களையும் கரைத்து, செரிமானம் செய்யும் வல்லமை படைத்தவை.

இத்தனை அமிலத்தன்மை உடைய செரிமான நீரினை கொண்டு இயங்கவேண்டும் என்றால்,  எந்த அளவிற்கு நம் உள்வயிற்றுப் பகுதியில் காணப்படும் வழவழப்பான திரவப் படலம் உறுதித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று சிறிது கற்பனை செய்துப்பாருங்கள். இந்த படலம் குறையும்போதோ, அல்லது ஒரு பகுதியில் முழுவதும் கரையும்போதோ, செரிமான நீர் நேரிடையாக வயிற்றின் உட்பகுதியையும், சிறுகுடலின் முன்பகுதியையும்  தொட்டுவிடுகிறது. அமிலத்தன்மை வாய்ந்த இந்த நீர் அப்படி தொடும்பட்சத்தில், வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் ஏற்படுகிறது. பொதுவாக திசுக்களின் தொடர்ச்சி பாதிக்கப்படும்போது அதனை மருத்துவத்தில் “புண்” என்று சொல்கிறோம்.

வயிற்றுப்புண் பாதிப்பு

வயிற்றுப்புண் என்று சொன்னாலும் அது வயிற்றின் உள்பகுதியை மட்டும் இல்லாமல், சிறுகுடலின் மேல் பகுதியையும் அது பாதிக்கிறது. உணவுக்குழாய், ஆசனவாய், மற்றும் இதர செரிமான சம்பந்தம் உடைய அனைத்து உறுப்புகளிலும் இப்படியாக புண் ஏற்படலாம். வயிற்றிலும், முன்சிறுகுடலிலும் (duodenum) ஏற்படும் புண்ணையே வயிற்றுப்புண் அல்லது பெப்டிக் அல்சர் என்று அழைக்கிறோம்.

உள்வயிற்றில் மட்டுமே புண் இருந்தால் அதனை ஆங்கிலத்தில் காஸ்ட்ட்ரிக் அல்சர் (Gastric Ulcer) என்று அழைக்கிறார்கள். அதே போல முன்சிறுகுடலில் மட்டுமே புண் இருந்தால் அதனை டியோடினல் அல்சர் (Duodenal Ulcer) என்று அழைக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து பெப்டிக் அல்சர் (Peptic Ulcer) என்று அழைக்கிறார்கள். தமிழில் இரைப்பைப்புண் என்று அழைக்கிறார்கள்.

வாழும்முறை மாற்றத்திற்கும் (Lifestyle changes) இரைப்பைப்புண்ணுக்கும் உள்ள தொடர்பு

பொதுவாக இரைப்பைப்புண் என்பது நாம் வாழும்முறையை கண்டபடி மாற்றியதால் வந்த வினை என்று கூறலாம். சிறுவயது முதலே வாழும்முறையை மாற்றுவதால் பின் நாளில் அது விஸ்வரூபம் எடுத்து பல உடல் உபாதைகளை உற்பத்தி செய்ய வழிவகுக்கும். காலையில் சிற்றுண்டி சாப்பிடாமல் தள்ளிப்போடுவது, நிறைய உப்புடைய குப்பை உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்பது, இதெல்லாமே வாழும்முறையை மாற்றும் முறை தான். நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்வது, இறுக்கம், உளைச்சல், மன அழுத்தம், தூக்கமின்மை, சரியான நேரத்திற்கு தூங்காமல் விழித்து இருப்பது, போன்ற காரணங்களால் வயிற்றில் அதிகமாக செரிமான நீர் சுரக்கப்பட்டு அதனாலும் இரைப்பைப்புண் ஏற்படலாம்.

ஆரம்ப நிலையிலேயே இரைப்பைப்புண் கண்டறியப்பட்டால், அதனை முழுவதும் குணப்படுத்தலாம். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO), புள்ளிவிவரத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 85,000 பேர் இந்தியாவில் இரைப்பைப்புண் மோசமாகி இறக்கின்றனர்.

இரைப்பைப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள்

எல்லா நோய்க்கும் உள்ளது போலவே இரைப்பைப்புண் ஏற்படுவதற்கும் பல காரணங்கள் உண்டு. அவை

  • மரபு – குடும்பத்தில் யாருக்காவது இரைப்பைப்புண் இருந்தால் மற்றோருக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
  • அதிக அளவில் மது குடிப்பது, புகை குடிப்பது.
  • மருத்துவர்கள் எழுதிக் கொடுக்காத மருந்து மாத்திரைகளை கண்டபடி வாங்கி சாப்பிடுவது.
  • ஹெலிகோபாக்டீரியம் பைலோரி (Helicobacterium pylori) என்ற கிருமியாலும் இரைப்பைப்புண் ஏற்படும் சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம்.
  • மாதக்கணக்கில் சீக்காளியாக மருத்துவமனையில் இருப்பது ஒரு வித இரைப்பைப்புண்ணை ஏற்படுத்தும். இதனை Stress Ulcer என்று கூறுவார்கள்.
  • வயோதிகம் – வயது ஆக ஆக, இரைப்பைப்புண் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். பொதுவாகவே 50 வயதை கடந்தாலே இரைப்பைப்புண் வருவதற்கான சாத்தியக்கூறு மிகவும் அதிகம்.
Call Now