18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

நாள்பட்ட மலச்சிக்கல் உடலை எப்படியெல்லாம் பாதிக்கிறது?

நாள்பட்ட மலச்சிக்கல் பொதுவாக மலம் கழிக்க அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நபருக்கு நாள்பட்ட மலச்சிக்கல் இருக்கும்போது பல சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாள்பட்ட மலச்சிக்கலின் விளைவாக எப்படியான சிக்கல்கள் எல்லாம் வரும் என்று இந்த கட்டுரையில் காண்போம்.

மலச்சிக்கலுக்கும் நாள்பட்ட மலச்சிக்கலுக்கும் உள்ள வேறுபாடு

மலச்சிக்கலை மலம் கழித்தலில் ஏற்படும் சுணக்கம், மலம் கழிப்பதில் பல வாரங்களாக நீடிக்கும் சிரமம் என விளக்கம் அளிக்கலாம். ஒருவர் வாரத்திற்கு மூன்றுக்கும் குறைவான முறை மட்டுமே மலம் கழித்தால், அவர் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறலாம்.

இருக்கும் மலச்சிக்கல் ஒரு படி மேலே சென்று அவர்களின் அன்றாட வழக்கத்தில் தலையிடத் தொடங்கும் போது நாள்பட்ட மலச்சிக்கல் ஏற்படுகிறது. உங்களுக்கு 3 மாதங்களுக்கும் மேலாக மலச்சிக்கலின் அறிகுறிகள் இருக்கிறது என்றால், உங்களுக்கு இருக்கும் மலச்சிக்கலை நாள்பட்ட மலச்சிக்கல் என்று கூறலாம்.

நாள்பட்ட மலச்சிக்கலினால் ஏற்படும் சிக்கல்கள்

நாள்பட்ட மலச்சிக்கலின் விளைவாக ஏற்படக்கூடிய 4 சிக்கல்கள்

(1) மூல நோய் / பைல்ஸ்

(2) குத பிளவு (Anal Fissure)

(3) மலம் கல்லாகிப்போதல் (Fecal Impaction)

(4) மலக்குடல் வீழ்ச்சி (Rectal Prolapse)

நாள்பட்ட மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோய்

மலச்சிக்கலுக்கு ஒருவர் ஆளாகும்போது, அவர்கள் உடலில் இருந்து மலத்தை வெளியேற்றுவதற்கு கடினமாக முக்குவார்கள். நாம் கடுமையாகத் முக்கும்போது, மலக்குடல் மற்றும் ஆசனவாயைச் சுற்றியுள்ள நரம்புகள் வீங்கக்கூடும். இந்த வீங்கிய நரம்புகள் தான் மூல நோய் அல்லது பைல்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஆசனவாயில் உள்ள நரம்புகள் வீக்கமடையும் போது, அவை உள்மூலம் என்று அழைக்கப்படுகின்றன. ஆசனவாயைச் சுற்றியுள்ள தோலின் கீழ் உள்ள நரம்புகள் அல்லது ஆசனவாயின் புறணி வீங்கியிருந்தால், அவை வெளிமூலம் என்று அழைக்கப்படுகின்றன.

மூல நோய் அரிப்பையும், வலியையும் ஏற்படுத்தும். மலம் கழிக்கும்போது போது அவை இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். இது பெரும்பாலும் இரத்தப்போக்கு உள்ள மூலம் (Bleeding piles) என்று குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் இரத்தப்போக்கு மலத்திலோ, டாய்லெட் பேப்பரிலோ இரத்தக் கோடுகளாகக் காணப்படுகிறது. சில சமயங்களில் மூலக்கட்டிகளுக்குள் இரத்தம் தேங்கி நிற்கும். அத்தகைய நிலையில் மூலநோயை ப்ரோலாப்ஸ்டு நிலை உள்ள மூலநோய் என்கிறார்கள். இந்த நிலை ஒரு கடினமான கட்டியை ஏற்படுத்துகிறது. இது அடிக்கடி வலியை ஏற்படுத்தும். மூல நோய் சிலருக்கு இரத்தக் கட்டிகள் அல்லது தொற்றினால் வரும் நோய்களையும் கூட ஏற்படுத்தலாம்.

நாள்பட்ட மலச்சிக்கலால் ஏற்படும் ஆசனவாய் பிளவு

கெட்டியான மலம் வெளியேறும் போதோ அல்லது மலம் கழிக்க சிரமப்படும் போதோ, ஆசனவாயைச் சுற்றியுள்ள திசு கிழிந்துவிடும். இந்த கிழிசல்களை ஆசனவாய் பிளவுகள் என்று குறிக்கிறார்கள். அவை பெரும்பாலும் அரிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும். பெரும்பாலான ஆசனவாய் பிளவுகள் இரத்தப்போக்கையும் ஏற்படுத்துகின்றன. வலிக்கு பயந்து மலத்தை அடக்கி வைப்பதால் குழந்தைகளுக்கு இந்த ஆசனவாய் பிளவு பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது.

கிழிசல்கள் மிகவும் சிறியதாகவே ஏற்படுகின்றன. ஆனால் சில நேரங்களில், குறிப்பாக நாள்பட்ட மலச்சிக்கல் இருக்கும்போது, அவை பெரிதாக வளர்ந்துவிடுகிறது. இது ஆசனவாய் திறப்பில் உள்ள தசை வளையத்தை பாதிக்கலாம். இது குணமடைய கூட வெகு நாட்கள் ஆகலாம். இந்த வகையான ஆசனவாய் பிளவுகளை சரிசெய்ய ஒரு அறுவை சிகிச்சை மட்டுமே உதவும்.

நாள்பட்ட மலச்சிக்கலால் ஏற்படும் மலம் கல்லாகிப்போதல் (Fecal Impaction)

அரிதான சந்தர்ப்பங்களில், உடலில் இருந்து மலம் வெளியேறாதபோது, அவை குடலில் சிமெண்ட் போல ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த கடினமான மலக்குவியல் உள்ளுறுப்புகளில் அடைப்பை ஏற்படுத்தும். நமது பெருங்குடல் பொதுவாக மலத்தை வெளியே தள்ள அழுத்துகிறது. ஆனால் மலத்தின் கடினத்தன்மை பெருங்குடலை அழுத்தவும், நகர்த்தவும் அனுமதிக்காததால் மலம் கழிக்கவே முடியாத நிலை ஏற்படுகிறது. மலம் கழிக்காமல் குடல் அடைபடும் போது, வலியும், வாந்தியும் ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டால் அவசர சிகிச்சையாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படுகிறது.

நாள்பட்ட மலச்சிக்கலால் ஏற்படும் மலக்குடல் வீழ்ச்சி (Rectal Prolapse)

நமது மலக்குடல் பெருங்குடலின் இறுதிப் பகுதி ஆகும். தொடர்ந்து மலத்தை வெளியேற்ற முக்குவது கூட மலக்குடலை நீட்டி உடலுக்கு வெளியே நழுவிச் சரிய வைக்கலாம். மலக்குடலின் ஒரு பகுதியோ, அல்லது முழுவதுமாகவோ நழுவி வெளியே வரலாம். மலக்குடல் சரிவினால் வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த நிலைக்கும் அவசர சிகிச்சை தேவை.

எனவே நீங்கள் மலச்சிக்கலின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினால், உடனே உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மலச்சிக்கல் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக மருத்துவர் தீர்மானித்தால், உங்கள் வாழ்க்கை முறையை மாற்ற பரிந்துரைக்கப்படுவீர்கள். கூடவே உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவைச் சேர்க்கவும் பரிந்துரைக்கப்படுவீர்கள். மலச்சிக்கலுக்கு சிகிச்சை தேவை என்று மருத்துவர் தீர்மானித்தால், அதைச் சமாளிக்க உங்களுக்கு அதற்கான மருந்துகளை பரிந்துரைப்பார்.

Call Now