18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

வயிற்றுப்புண் ஏற்பட்டால் உருவாகும் ஆரோக்கிய குறைபாடுகள்

வயிற்றுப்புண் என்பது வயிற்றிலும், சிறுகுடலின் முன் பகுதியிலும் ஏற்படும் வலி ஏற்படுத்தக்கூடிய ரணங்கள் ஆகும். சரியாக வயிற்றின் நடுப்பகுதியில் ஏற்படும் இந்த வலி வயிற்றுப்புண்ணுக்கே உண்டான பிரத்யேகமான ஒரு வலியாகும். இந்த வலி குறிப்பாக நெஞ்சுக்கும், தொப்புளுக்கும் இடையே ஏற்படுகிறது. இந்த வலி ஏற்பட்டால் சுலபமாகவே அது வயிற்றுப்புண்ணால் தான் ஏற்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். அப்படியிருந்தும் சில பேர் அதனை கவனிக்காமல் விட்டுவிடுவதுண்டு. இந்த கவனிப்பின்மை வயிற்றுப்புண்ணை அதிகமாக்கி பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். என்ன மாதிரியான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன? வாருங்கள் அலசுவோம்.

வயிற்றுப்புண்ணால் ஏற்படும் உள் ரத்தக்கசிவு

இரண்டுவிதமான உள் ரத்தக்கசிவு ஏற்படலாம். முதல் வகையில் ரத்தக்கசிவு மெல்லமாக இருக்கும், ஆனால் இருந்துக் கொண்டே இருக்கும். வயிற்றுப்புண்ணானது, வயிற்றிலோ, முன் சிறுகுடலிலோ, கீறல் போன்று இருப்பதால் ரத்தக்கசிவு மெல்லமாக ஏற்படுகிறது. இப்படி ரத்தம் சிறிது சிறிதாக கசிந்துக்கொண்டே இருப்பதால் ரத்தசோகையில் கொண்டுபோய் முடியும்.

இரண்டாவது வகையான ரத்தக்கசிவு ஆபத்தான வகை என்றே சொல்லவேண்டும். வயிற்றிலோ, முன் சிறுகுடலிலோ பெரிய ஒரு ரத்தக்குழாய் ஒன்றில் வயிற்றுப்புண்ணால் வெடிப்பு ஏற்படலாம். அப்படி ஏற்படும் பட்சத்தில் ரத்தக்கசிவு அதிகமாக இருக்கும். மிக அதிகமான ரத்தக்கசிவு ஆபத்தான கட்டத்தை எட்டும் பட்சத்தில் மரணமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பொதுவாக சொல்லவேண்டும் என்றால் உள் வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டால், காப்பித்தூள் நிறத்தில் வாந்தி வரும். இதிலேயே உள்ளுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று அறிந்துக் கொள்ளலாம். மலம் கழிக்கும் பட்சத்தில், மலத்தின் நிறம் தார் போன்ற கருமை நிறத்திலோ, மெரூன் என்று சொல்லப்படும் அடர் சிவப்பு நிறத்திலோ இருக்கும். இது கூட உள்ளுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துக் கொள்ள உதவலாம்.

செரிமான பாதையில் ஏற்படும் ஓட்டை

இது மிகவும் அரிதாக ஏற்படும் ஒரு நிலை என்று தான் சொல்லவேண்டும். வயிற்றுப்புண் இருக்கும் சிலருக்கு இது ஏற்படலாம். வயிற்றுப்புண் அந்த அளவிற்கு ஆழமாகவும், அதிகமாகவும் இருக்கும் பட்சத்திலேயே செரிமானப் பாதையில் ஓட்டை ஏற்படுகிறது. அதிகமாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்ட காரணத்தால் வயிற்றுப்புண் ஏற்பட்டு இருப்பின், இந்த வகை வயிற்றுப்புண்ணே அதிகமாக ஓட்டையை ஏற்படுத்துகிறது.

ஓட்டையின் காரணமாக உணவு, குடலில் உள்ள நுண்கிருமிகள், ரத்தம், செரிமான நீர் போன்றவை குடலில் இருந்து வெளியேறி வயிற்றுப்பகுதியின் உள்பகுதியில் கசியும். இதனால் தொற்று ஏற்படும். பெரிடோனிடிஸ் என்ற நிலைக்கும் உடல் தள்ளப்படும். பெரிடோனிடிஸ் ஏற்பட்டால் அது ஆபத்தான கட்டத்தில் உடல் நிலை இருக்கிறது என்று அர்த்தம். உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தால் மட்டுமே உயிர் காப்பாற்றப்படும்.

வயிற்றில் உள்ள வெளியேற்றும் குழாயில் ஏற்படும் அடைப்பு

சில நேரங்களில் வயிற்றுப்புண் ரணமாகி வடுவாகிவிடுவதுண்டு. இது திரும்ப திரும்ப ஏற்படும்போது வயிற்றின் வெளிப்பாதையில் (pylorus) அடைப்பை ஏற்படுத்தலாம். இந்த வடுத்தசைகள் பல்கிப் பெருகும் பட்சத்திலும், வயிற்றின் வெளிப்பாதையில் அடைப்பை ஏற்படுத்தலாம். பொதுவாக அடைப்பு ஏற்படும் பட்சத்தில் நிறைய முறை வாந்தி வரும். வாந்தியில் வெளி வருவது பெரும்பாலும் அரைகுறையாக செரித்த உணவாகவே இருக்கும்.

அடைப்பு என்ன காரணத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை என்டோஸ்கோபி மூலம் தெரிந்து கொள்ளலாம். அடைப்பை வெறும் ரணம் மட்டுமே ஏற்படுத்தி இருந்தால், மருந்துகள் கொண்டு அதனை குணப்படுத்தலாம். ஆனால் வடுத்தசைகள் தோன்றி பெருகியிருந்தால், அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருக்கும்.

வயிற்றுப்புண் ஏற்பட்டால் உருவாகும் ஆரோக்கிய குறைபாடுகள் பற்றி மருத்துவர் மாறன்

வயிற்றுப்புண்ணை ஆரம்ப நிலையிலேயே எளிதாக கண்டுபிடிக்கலாம் என்று மருத்துவர் மாறன் கூறுகிறார். நம் உடல் அதற்கான சமிஞையை நமக்கு தெளிவாகவே கொடுத்துவிடும் என்கிறார். அதனை உதாசீனப்படுத்தினால் விளைவு நல்லதில்லை என்று நம்மை எச்சரிக்கிறார்.

உங்களுக்கு வயிற்றுப்புண் இருக்கிறது என்பதை நல்ல காஸ்ட்ரோ மருத்துவரை அணுகி அவர் பார்க்கும் என்டோஸ்கோபி (Endoscopy) மூலமே உறுதி செய்துக்கொள்ளுங்கள். என்டோஸ்கோபி முறை தான் வயிற்றுப்புண் எந்த இடங்களில் இருக்கிறது, எத்தனை இடங்களில் இருக்கின்றன, எந்த நிலையில் இருக்கின்றன என்று துல்லியமாக நமக்கு உணர்த்தும் என்று மரு. மாறன் கூறுகிறார்.

அவர் பரிந்துரைக்கும் மருந்துகளையே எடுத்துக்கொள்ளுங்கள். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எந்த விதமான மாத்திரை மருந்துகளையும் விழுங்கக் கூடாது என்று நமக்கு எச்சரிக்கிறார் மரு. மாறன் அவர்கள். வருமுன் காக்கும் நடவடிக்கைகளே வயிற்றுப்புண்ணில் இருந்து நம்மை காக்கும் சிறந்த வழிமுறை என்று விளக்குகிறார் மரு. மாறன்.

Call Now