18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

மலம் ஆறு விதம்

மலம் எல்லோரும் கழிப்பது தான். இது இயற்கையில் நிகழ்வது. இதில் என்ன இருக்கப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம். இதில் உடல் நலமாக உள்ளதா என்ற அறிகுறிகள் நிறையவே தென்படும். பொதுவாக தினமும் மலம் கழிப்பது நம் உடல் நலத்திற்கு நல்லது. தினமும் மலம் வரவில்லை என்றால் உங்கள் உடலை கூர்ந்து கவனியுங்கள். மேலே கூறிய கூற்றில் உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா, இல்லையா என்று தெரிந்துக்கொள்ளலாம். நீங்கள் சற்றே குனிந்து உங்கள் மலத்தின் தன்மையையும், நிறமும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்கள் ஆரோகியத்தின் கண்ணாடி அதில் இருக்கிறது. வாருங்கள் மேலும் தெரிந்துக் கொள்வோம்.

மலத்தில் ஏழு வித தன்மை

மலம் வெளியேறும் போது ஏழு வித தன்மை கொண்டு வெளியேறுகிறது. மலத்தின் ஒவ்வொரு தன்மையும் உங்கள் உடல் நலத்தின் நிலையை குறிக்கிறது.

முதல் தன்மை

மலம் சிறு சிறு பந்துகள் போல வெளியேறும். அப்படி வெளியேறும்போது சிறிது கஷ்டத்தை கொடுத்து வெளியேறும்.

அறிகுறி – உங்களுக்கு நாள்பட்ட மலச்சிக்கல் இருக்கலாம். உங்கள் உடலுக்கு நார்ச்சத்து மிக அதிகமாக தேவைப்படுகிறது.

இரண்டாம் தன்மை

மலம் சிறு சிறு உருண்டையாக இருக்கும். ஆனால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருக்கும். மலம் கழிக்கும் போது லேசான அசௌகரியம் இருக்கும்.

அறிகுறி – உங்களுக்கு மிதமான மலச்சிக்கல் இருக்கலாம். உங்கள் உடலுக்கு நிறைய நார்ச்சத்து தேவைப்படுகிறது. நார்ச்சத்து உள்ள உணவுகளை இன்னும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே குறிக்கிறது.

மூன்றாவது தன்மை

சாசேஜ் வடிவத்தில்மலம்வெளியேறும். அதன் மேல் வெடிப்புகள் காணப்படலாம். மலம் வெளியேறும் போது இலகுவாகவே வெளியேறும். நீங்கள் முக்கவோ முனகவோ வேண்டிய அவசியம் இருக்காது.

அறிகுறி – உங்கள் உடல் நலம் பொதுவாக நான்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

நான்காவது தன்மை

உங்கள் மலம் பாம்பு போல நீளமாக வெளியேறும். அதன் மேற்புறம் வழவழப்பாக இருக்கும். அவை வெளியேறும்போது மிகவும் சுலபமாக வெளியேறும். இதை தான் கச்சிதமான மலம் என்று கூறுவார்கள்.

அறிகுறி – உங்கள் உடல் ஆரோகியம் மிக நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஐந்தாவது தன்மை

உங்கள் மலம் மென்மையாக இருக்கும். நீளமாக இருந்தாலும், விட்டு விட்டு வெளியேறும் தன்மையோடு இருக்கும்.

அறிகுறி – உங்கள் உடல் நலத்தில் பெரிய சிக்கல் ஒன்றும் இல்லை தான். ஆனாலும் உங்கள் உணவு சரியான விகிதத்தில் அனைத்து சத்துகளும் உள்ளடங்கியதாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஆறாவது தன்மை

மலம் திடமும், திரவமும், கலந்த நிலையில் வெளியேறும். திடமாக வெளியேறும் மலம் சீரான மேற்பரப்பு இல்லாமல் இருக்கும்.

அறிகுறி – உங்களுக்கு மிதமான பேதி இருக்கலாம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் சில நாட்களுக்கு கவனமாக இருங்கள். பேதி தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை நாடுங்கள்.

ஏழாவது தன்மை

உங்கள் மலம் முழுவது திரவ நிலையில் இருக்கும். நீங்கள் மலம் கழிப்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும். போய் உட்கார்ந்தவுடன் திறந்துவிட்ட அணைபோல பீய்ச்சி அடிக்கும். அடிக்கடி இப்படி கழிசலாக போனால் உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையலாம்.

அறிகுறி – உங்களுக்கு மோசமான பேதி, அல்லது சீதபேதி இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகுங்கள். இந்த நிலையில் வரும் மலம் உங்கள் உடல் மோசமான நிலையில் உள்ளது என்பதை குறிக்கிறது.

ஆறு நிறங்களில் மலம்

நமது உடலில் இருந்து வெளியேறும் மலம் ஆறு நிறங்களில் இருக்கலாம். ஒவ்வொரு நிறமும் உங்கள் உடல் நிலை பற்றிய கதையை சொல்கிறது.

மஞ்சளும் களிமண் நிறமும் கலந்த நிறத்தில் உள்ள மலம்

நம் மனித மலத்தின் இயற்கையான நிறம் இது தான். இந்த நிறத்தில் உள்ள மலம், சிறிது வெளிறியோ, அடர்த்தியான நிறத்திலோ இருக்கலாம். ஈரலால் சுரக்கப்படும் பித்தநீரின் நிறத்தை இது பிரதிபலிக்கிறது. இந்த நிறத்தில் மலம் வந்தால் பொதுவாக உங்கள் உடல் நலமோடு இருக்கிறது என்று அர்த்தம்.

பச்சையான நிறத்தில் உள்ள மலம்

நீங்கள் சாப்பிட்ட உணவு, சரியாக செரிக்காமல், மிக துரிதமாக, உங்க செரிமான உறுப்புகளில் நகர்கிறது என்றால் உங்கள் மலம் இந்த நிறத்தில் இருக்கலாம். அதிகமான அளவில் கீரை சாப்பிட்டாலும், மலம் பச்சை நிறத்தில் இருக்கலாம். ஒருக்கால் கீரை சாப்பிடாமலே பச்சை நிறத்தில் உங்கள் மலம் இருக்குமானாலோ, தொடர்ந்தாற்போல பச்சை நிறத்தில் வருகிறது என்றாலோ, மருத்துவரை நாடுங்கள்.

முழுவதும் மஞ்சள் நிறத்தில் உள்ள மலம்

உங்கள் மலத்தில் அதிகமான கொழுப்பு இருக்கிறது என்று அர்த்தம். அவை எண்ணெய் போன்று இருந்தாலோ, நாற்றம் அதிகம் உடையதாக இருந்தாலோ, ஒழுங்காக உடலில் சத்து சேரவில்லை (mal-absorption) என்பதை குறிக்கிறது. அடிக்கடி இப்படி தான் மலம் கழிக்கிறீர்கள் என்றால் மருத்துவரை நாடி பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

கருமையான நிறத்தில் உள்ள மலம்

உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு இருந்தால் கருமை நிறத்தில் உங்கள் மலம் இருக்கும். அநேகமாக இரைப்பைப்புண் (Peptic Ulcer) காரணமாகவே இந்த நிறத்தில் மலம் இருக்கும். சிலருக்கு உள்ளுறுப்புகளில் புற்றுநோய் இருந்தால் ஏற்படும் ரத்தக்கசிவு காரணமாகவும் இந்த நிறத்தில் மலம் இருக்கலாம். நீங்கள் ஒருக்கால் இரும்பு சத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இருந்தாலும், உங்கள் மலம் கருமை நிறத்தில் இருக்கலாம். இரும்பு சத்து மாத்திரை எடுக்காமல் மலம் கருமை நிறத்தில் இருக்கிறதென்றால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

ரத்தத் திட்டுகளுடனோ, சிவப்பான நிறத்திலோ உள்ள மலம்

மலத்தில் ரத்தக்கசிவு காணப்பட்டால், மூலம், பவுத்திரம் போன்ற காரணங்களால் இருக்கும். சில நேரத்தில் மலக்குடலில் ஏற்பட்டு இருக்கும் புற்றுநோயின் காரணமாகக் கூட மலம் சிவப்பாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் மருத்துவரை அணுகி மலம் சிவப்பாக இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடியுங்கள்.

முக்கியமான விஷயம்

ரத்தம் கருப்பாக இருந்தால் வயிறு அல்லது சிறுகுடலின் முன்பகுதியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். ரத்தம் சிவப்பாக இருக்கிறது என்றால், மலக்குடலின் கடை பகுதியில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்).

வெண்மை கலந்த வெண்களிமண் போன்ற நிறத்தில் உள்ள மலம்

உங்கள் பித்தநீர் சுரப்பில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் இது போன்ற வெளிர் நிறத்தில் மலம் வெளியேறுவது உண்டு. பித்தநீர் சரியானபடிக்கு வயிற்றுக்கு வந்து சேரவில்லை என்றால் உடனே காலம் தாழ்த்தாமல் மருத்துவரை நாடுங்கள். பித்தநீர் கற்கள் தடையை ஏற்படுத்தி இருந்தால் பித்தநீர் வயிற்றுக்கு இறங்காமல் மலத்திற்கு இந்த வெளிர் நிறத்தை கொடுக்கும். உடனே பரிசோதித்து பார்த்து விடுவது மிகவும் நல்லது.

Call Now